ஜேர்மன் நாடாளுமன்றக் குழுவினர் நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளனர். இக்குழுவினரோடு இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜேன்ஸ் புளொட்னரும் வருகை தரவுள்ளார். இக்குழுவினர் நாளை யாழ்.மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளனர். வடமாகாண அளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தலைமையில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் மாவட்டச்செயலகத்தின் சார்பில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், அபிவிருத்திப்பணிகள், பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கலந்துரையாடலில் சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் யாழப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடலில் யாழ்ப்பாண சிவில் சமூகப்பிரதிநிதிகள் பல்வேறு பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கதாகும்.