கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற விரும்புவதை தவறு என எவ்வாறு கூறமுடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் கட்சிகளிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று தமிழ்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது வடக்கில் இராணுவக் குடியிருப்புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளரும் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிப்பவருமான எம்.கே சிவாஜிலிங்கம் ஜனாதிபதியிடம் தெரிவித்த போது சற்று உணாச்சிவசப்பட்ட நிலையில் ஜனாதிபதி இக்கேள்வியைக் கேட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தாரான ந.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
தெற்கில் தமிழ் மக்கள் குடியேறி ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் ஏன் சிங்கள மக்கள் குடியேறி வாழ முடியாது? அதில் என்ன தவறு இருக்கின்றது? என ஜனாதிபதி தமிழ் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.
அத்துடன் பாதுகாப்பின் அவசியம் கருதி வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறு குற்றங்களுக்காக சிறைகளிலுள்ள தமிழ் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அக்கைதிகளின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் முக்கியஸ்தரான எம்.கே சிவாஜிலிங்கம் கருத்துக்கூறுகையில் ஜனாதிபதியுடனா சந்திப்பு திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.