புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மூவரை பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 58வது படைப் பிரிவினரிடம் முரசுமோட்டை பிரதேசத்தில் வைத்தே படையினரால் இம் மூவரும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
படையினர் முன்னேறி நடத்திய தாக்குதல்களின் பின்னர் நடத்திய தேடுதலின் போது புலிகளின் நான்கு சடலங்கள், மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக ட்ரக் வண்டி ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த மோதல்கள் நடந்த சில மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து இரகசியமாக தப்ப முயன்ற மூவரையே படையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரில் அலக்ஸ் மற்றும் யசோதரன் ஆகிய இருவரும் புலிகள் இயக்கத்தின் முக்கிய உறுப்பினராவர். அலக்ஸ் என்பவர் பொட்டு அம்மானுடன் இணைந்து செயற்பட்டுள்ளதுடன், புலிகளின் புலனாய்வு துறையிலும் இணைந்து செயற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன் யசோதரன் என்பவர் புலிகள் இயக்கத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் பாதுகாப்பு பிரிவிலும் இணைந்து செயற்பட்டுள்ளார்.