இந்திய எதிர்க்கட்சித் தலைவர் அந்நாட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி நாட்டு நலனில் அக்கறை செலுத்துவது போன்று எமது நாட்டு எதிர்க்கட்சி தலைவரும் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யுத்தம் முடியும் தறுவாயில் அரசை விமர்சிக்காமல் நாட்டு நலன் கருதி ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு சுகாதார போஷாக்கு நலத்துறை அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஹிரியாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், குறிப்பிட்டதாவது:- கிழக்கில் தொப்பிகலகாடு தொடக்கம் வடக்கில் கிளிநொச்சி வரை எமது படையினர் வெற்றிகொண்டதை நகைப்புக்கிடமாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பெற்றோல் விலை குறைப்பு பற்றிப் பேசுவது வேடிக்கையான விடயமாகும். அவரது ஆட்சிக் காலத்தில் படைவீரர்களை பலமுள்ளதாக்குவதை விடுத்து எல்.ரீ.ரீ.ஈ.யினரை பலசாலிகளாக ஆக்கினர். இதன் காரணமாக பெருமளவு யுத்த செலவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது.
சிறந்த தலைமைத்துவம் இல்லாத ஐ.தே.கட்சியினால் இந்நாட்டை ஆள முடியாது. தங்களுக்குள் பிளவுபட்டுக் கொண்டுள்ள இக்கட்சியினர் எதிர்கால சந்ததியினர் நலன் பற்றிப் பேசுவது வேடிக்கையாகும். கிளிநொச்சியை பிடிக்க முடியுமானால் பெற்றோல் விலையைக் குறைத்துக் காட்டுங்கள் என சவால் விடுவது சிறுபிள்ளைத்தனமானதும், பலவீனமானதுமான பேச்சாகும்.