ஊடகச் சுதந்திரத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்த விதமான செயற்பாட்டையும் அரசாங்கம் அனுமதிக்காது; செய்தியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்று பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமல்ல என்றும் குற்றவாளிகளைக் கண்டறிய புலனாய்வுத்துறை விசாரணைகள் முனைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் மீதான நெருக்கடிகள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளதாகவும், இதனைத் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள் ளுமாறும் ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்கவும், ஜே. வி. பி. எம்.பி. சுனில் ஹந்துன்னெத்தியும் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அவர்களுக்கும் பிரபுக்களின் பாதுகாப்பு வழங்கி பாராளுமன்றத்திற்கு அழைத்துவர வேண்டிய நிலை ஏற்படுமென்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்குப் பதிலளித்த பிரதமர், ஊடகச் சுதந்திரம் பாதிப்படைய அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அண்மைய சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார்.