வவுனியா வரும் மக்களுக்கான உணவை வழங்க உலக உணவு திட்டம் உறுதி

வன்னிப் பகுதியிலிருந்து அரச பாதுகாப்புப் பிரதேசமான வவுனியாவிற்கு வரும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்க உலக உணவுத் திட்டம் உறுதியளித்துள்ளது. வன்னியிலிருந்து ஒரு இலட்சம் பொது மக்கள் வவுனியாவிற்கு வருகை தருவரென எதிர்பார்க்கப்படுவதையடுத்து முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் பொது மக்களுக்குத் தேவையான உணவினை வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனர்த்த நிவாரண மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் யு.எல்.எம். ஹாலிதீன் தெரிவித்தார்.

அமைச்சு மேற்படி அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இவ்வுணவுப் பொருட்களை வழங்க உலக உணவுத் திட்டம் முன்வந்துள்ளதாகத் தெரிவித்த அவர் தொடர்ந்தும் தேவையானளவு உணவுப் பொருட்களை வழங்கவும் அவ்வமைப்பு பின்நிற்காது எனவும் தெரிவித்தார்.

அம்மக்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் பற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில்:-

வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வருவோருக்கான சகல அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரம் தற்காலிக வீடுகள் அமைக்கப்பட்டு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன் மஹாஓயா ஆற்றிலிருந்து ஆறு கிலோமீற்றருக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெறப்படுகிறது.

மெனிக்பாம் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதிக்கு மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக 40 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீன் வவுனியாவுக்கு நேரடியாகச் சென்று சகல நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்து வருகிறார்.

எந்தளவு மக்கள் வவுனியாவுக்கு வந்தாலும் அவர்களைப் பராமரிப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதற்குப் போதுமான நிதியினை வழங்கவும் அனர்த்த நிவாரண மீள்குடியேற்ற அமைச்சு தயாராகவே உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *