இலங்கை யில் வடக்கே மோதல்களினால் பாதிக்கப்படும் பொதுமக்களைப் பாதுகாப்பது தொடர்பில் இலங்கை வெளிநாட்டமைச்சர் தலைமையிலான உயர்குழுவொன்று (09) கொழும்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருக்கிறது.
இந்தச் சந்திப்புக் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள வெளிநாட்டமைச்சு, இதன்போது தமிழீழ விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டிலிருந்து மக்களை வெளியேறவிடாது தடுத்து வருவது குறித்தும், காயமடைந்தவர்கள் குறித்து வெளியாகும் சில தவறான தகவல்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டதாகவும், அரசும், ஐ.நாவின் தொண்டு நிறுவனங்களும் சிவிலியன்களின் உண்மையான தேவைகள் குறித்தும், மக்களின் பாதுகாப்புக் குறித்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும் எதிர்காலத்தில் ஒத்துழைப்புடன் செயற்படுவதெனவும் உடன்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சந்திப்பின்போது ஐ.நாவின் வதிவிடப்பிரதி தலைமையில், யுனிசெவ், யூ.என்.எச்.ஆர்.சி மற்றும் உலக உணவு ஸ்தாபனம் போன்றவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருக்கிறார். இந்தக்கூட்டத்தில் கருத்துவெளியிட்ட பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ, புலிகளின் தாக்குதலினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புக்கள் முழுமையான அளவில் வெளியிடப்படுவதில்லை என்று தெரிவித்திருந்ததாகவும், புலிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், அவர்களின் கட்டுப்பாட்டுப்பிரதேசத்திலிருந்து வெளியேறும் சிவிலியன்களின் தொகை இருபதினாயிரத்தையும் தாண்டியிருப்பதாகவும் இது மிகவும் உற்சாகமளிப்பதாகவும் தெரிவித்ததாகவும் வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் சில சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் தகவல்களை வெளியிடும்போது பொறுப்புடன் செயற்படவேண்டுமென்றும் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது தெரிவித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.