வடக்கில் தற்பொழுதுள்ள சமகால நிலையினை கலந்துரையாடுவதற்காக டென்மார்க்கின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பெர் ஸ்டிக்மொலர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். நாட்டிய பரப்பப்படும் திரிபுபடுத்தப்பட்ட சில தகவல்கள் பற்றி நேரடியாக விளக்கமளிப்பதற்கு தமக்கு சந்தர்ப்பமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக ரோஹித போகொல்லாகம கூறினார்.
வடக்கில் அல்லலுறும் பொது மக்கள் பற்றிய டென்மார்க் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் கவலை மற்றும் அவரது யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பு என்பவற்றிற்கு பதிலளித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், பாதுகாப்பு மற்றும் நலனோம்புகை என்பன இலங்கை அரசாங்கத்திற்கு மிக அவசியமானவை எனக் கூறினார்.
அரசாங்கம் வடக்கிற்கு பொருட்களை வழங்குதலை தொடர்தல் மற்றும் பாதுகாப்பான பிரதேசங்களுக்கு சிவிலியன்களை செல்ல அனுமதித்து பாதுகாப்பு பிரதேசமொன்றை ஒதுக்கியுள்ளமை என்பன அரசாங்கம் பொது மக்களின் மேல் கொண்டுள்ள அக்கறையினை எடுத்துக் காட்டுவதாக கூறினார். புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் சுருங்கிச் செல்லும் அதேவேளை, பொது மக்கள் வாழ்வதற்கான நிலப்பரப்பு அதிகரித்துச் செல்கின்றது எனவும், அன்றாடம் மாற்றம் பெறும் நிலைவரம் பற்றிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், இலங்கை பல்லின சமூக சமுதாயமொன்றை கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வதுடன், ஜனநாயக கட்டுக்கோப்பின் கீழ் அதிகார பரவலாக்கத்தை மத்தியிலிருந்து சகல பிரதேசங்களுக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறையினை முன்னெடுப்பதாகவும் கூறினார்.