இலங்கையில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 15 வயதான சிறுமியை பாலியல் சுரண்டலை நோக்காக கொண்டு இணைய வழியாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பான வழக்கில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொழும்பின் புறநகர்பகுதியில் 15 வயதான சிறுமியை இணைய வழியாக விற்பனை செய்தமை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கொழும்பு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இந்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை சுமார் 40 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சிலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசியில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் வங்கியின் முகாமையாளர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கொழும்பு பிரதம நீதவான் முன், முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், மிஹிந்தலே பிரதேச சபையின் பிரதி தவிசாளர், வாகன ஓட்டுநர்கள், விளம்பரத்தை வடிவமைத்தவர், கப்பலின் கப்டன், கப்பல் பணியாளர்கள், இரத்தினக்கல் வியாபாரிகள், விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தளங்களின் நான்கு உரிமையாளர்கள், மாலைதீவின் முன்னாள் அமைச்சர் மொஹமட் அஷ்மாலி, சிறுமியை பாலியல் சுரண்டலுக்காக பயன்படுத்திய ஹோட்டலின் முகாமையாளர், ஸ்ரீலங்கா கடற்படையின் இதயநோயியல் நிபுணர் உள்ளிட்ட 37 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.