மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “கடந்த வாரம் மலையகச் சிறுமி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டிலே எரியுண்டு மரணித்திருக்கிறார்.
பொறுப்புவாய்ந்த ஒரு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், சமூகத்தை வழிநடத்துபவர் என்ற ரீதியில் மலையகச் சிறுமியின் மரணம் குறித்த விசாரணைகளுக்கு ரிஷாட் பதியுதீன் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதே நேரத்தில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த 16 வயதான, ஜூட் குமார் இஷாலினி என்ற சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இந்த விடயம், சிறுபான்மையினரை உள்ளடக்கியதாக இருப்பதால், இந்த விடயம் தொடர்பில், அதிகமாக விளம்பரப்படுத்தப்படக்கூடாது, குறிப்பாக அரசியல் மயமாக்கப்படக்கூடாது. அளவுக்கு அதிமான முக்கியத்துவத்தை வழங்கவேண்டாம் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.