இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில் அவர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக அரசாங்கம் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்ற நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டிருக்கிறது. நேற்றையதினம் சுமார் 2000க்கும் அதிகமானோர் இணைந்து நுவரெலியாவில் மாபெரு் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.
மேலும் அரசாங்க ஊழியர்களை கடமைக்கு திரும்புமாறு அரசாங்கம் பணித்துள்ள நிலையில் ஆசிரியர் சங்கம் இதற்கு மேலும் தன்னுடைய எதிர்ப்பை காட்டியுள்ளது். முக்கியமாக கல்வி அமைச்சிடம் இருந்து தெளிவான அறிவித்தல்கள் வரும் வரை பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் , “முடிந்தளவு விரைவாக பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போதைய சூழ்நிலையில் வசதியற்ற குடும்பங்களில் உள்ள மாணவர்கள் கல்வி வாய்ப்புகளை இழந்துள்ளதாக கூறினார்.
நாட்டின் தொலைதூர பகுதிகளில், குறிப்பாக இணைய அணுகல் இல்லாத பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கு இது பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.
தற்போது மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அவர்கள் தயாராக இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழ்நிலையில், சுகாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, விரைவில் பாடசாலைகளைத் திறப்பதே முதன்மை குறிக்கோள் என்றும் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.
இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழக்கம் போல் தங்கள் கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனவே இந்த சூழலில் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பாடசாலைகளுக்குச் சென்று திறப்பதற்குத் தேவையான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.