“வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு. நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டோம்.” – அமைச்சர் வாசுதேவ

வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிட்டும் எனவும் அதற்கான வேலைத்திட்டமாகவே வவுனியா நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“வவுனியா மாவட்டத்தில் 2 பிரதேச செயலகங்களின் கீழுள்ள வவுனியா நகரம் மற்றும் வவுனியா தெற்கு பிரிவுகளின் கார்தாசின் குளம், மகரம்ப குளம் மற்றும் மாமடுவ ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் குடிநீர் குழாய்களை பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

8.7 கிலோ மீற்றர் தூரத்திற்கு குடிநீர் குழாய் பொருத்துதல் மற்றும் புதிய இணைப்புக்களை வழங்குதல் என்பன இடம்பெறும். இதற்காக 46.24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா நீர் திட்டத்திற்கு நீர் பெற்றுக் கொள்ளும் இடமாக சேராறு நீர் தேக்கம் காணப்படுகின்றது. வவுனியாவுக்கு குடிநீரை வழங்குவதற்கு இந்த நீர்த்தேக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவுக்கு தேவையான குடிநீரை வழங்குவதற்கு நீர் பெற்றுக்கொள்ளும் வளங்கள் போதுமானளவு காணப்படுகின்றன. புதிய குழாய்களைப் பொருத்தி அனைவருக்கும் குடிநீர் வழங்குவது எமது வேலைத் திட்டமாகும். அதற்காகத்தான் நாம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

வருடாந்தம் நாம் வரவு செலவுத் திட்டம் மூலம் குறிப்பிடத்தக்க அளவு குடிநீருக்காக நிதியை ஒதுக்கி எமது நீர் வழங்கல் அமைச்சு பணியாற்றி வருகின்றது. அதன் மூலம் வடக்கிற்கும் வவுனியா பிரதேசத்திற்கும் குடிநீர் வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் மூலம் வடக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதே எமது நோக்கமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *