பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனப் போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர். அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் முன்னாள் தீவிரவாதியும் ஒருவர். திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.