யாழில் வீட்டின் மீது பெற்றோல்குண்டு வீசி வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – வழமை போல விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அறிவிப்பு !

யாழ்ப்பாணம், அரசடி மற்றும் பழம் வீதியில் சமூக விரோத கும்பல் வீடுகளுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தியுள்ளதுடன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த 25இற்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் அரசடி வீதி பகுதியில் இரண்டு வீடுகளை அடித்து உடைத்து சேதம் விளைவித்ததுடன், வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுவீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது வீட்டின் கதவுகள் அடித்து உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.

அதே கும்பல், பழம் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்து தூக்கத்தில் இருந்த பெண்களை அச்சுறுத்தி அடாவடி ஈடுபட்டதுடன், கதிரைகள் மேசைகள் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதமாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பழம் வீதியில் உதயசூரியன் சுதர்சன் என்ற இளைஞன் தலையில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் நல்லூர் அரசடி நான்காம் ஒழுங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் நாளுக்கு நாள் வன்முறைக்கும்பல் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் சந்தேகநபர்கள் கைது என அறிவிக்கப்படுவதும் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதும் வழமையாகிவிட்டது. வடக்கு ஆளுனர் ஜீவன் தியாகராஜா வாள்வெட்டுக்குழுக்களை அடக்குவது   தொடர்பில் தீவிர கவனம் செலுத்துவதாக அறிவித்திருந்ததன் பின்னர் பல வாள்வெட்டுச்சம்பவங்கள் அரங்கேறிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *