யாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.
யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன் கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.