கொழும்புக்கு வெளியே வெள்ளை வானில் வந்ததாகக் கூறப்படும் நபர்களினால் கடத்தப்பட்டு காணாமல் போயிருந்த யாழ் மாவடட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனின் சகோதரரரான செல்வராஜா ரவீந்திரன் நேற்றிரவு விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளரான இவர் மாதிவலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வதிவிடத் தொகுதியில் (தனது சகோதரனின் வதிவிடம் ) உயர் கல்வியின் நிமித்தம் தங்கியிருந்தார்.
கடந்த மாதம் 24ஆம் திகதி வழமை போல் காலை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையில் வதிவிடத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் கடத்திய நபர்களினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் இவர் நேற்று நள்ளிரவு கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து வரப்பட்டு வெள்ளவத்தைப் பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளதாக உறவினர்களின் தகவல்கள் மூலம் அறிய வருகின்றது.