இலங்கையில் அண்மையில் முடிவுக்கு வந்த மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் இருந்து வெளியே செல்லும் மக்களின் விபரங்கள் பதியப்பட வேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரியுள்ளது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் வலுக்கட்டாயத்தின் பேரில் வெளியே கொண்டுசெல்லப்படுதல், ஆட்கள் காணாமல் போதல் போன்றவற்றைத் தடுக்க இப்படியான பதிவுகள் தேவை என்று அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்போடு தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் நாளொன்றுக்கு முப்பது பேர் என்ற அளவில் அறிவிக்கப்படாத இடங்களுக்கு கொண்டுசெல்லப்படுவதாக உள்ளூர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்றை மேற்கோள் காட்டி ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
விசாரணைக்காக எவரும் கொண்டுசெல்லப்படும்போது அது பற்றி அவருடைய குடும்பத்தினருக்கு தகவல் வழங்கிவருவதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது.