முதலாளிமார் சம்மேளனத்துடனான ஏழாவது சுற்றுப் பேச்சும் தோல்வியில் முடிவடைந்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களின் ஒத்துழையாமைப் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
பதினொரு தினங்களாக முன்னெடுக்கப்படும் இப்போராட்டம் நேற்று முதல் மாற்று வடிவம் பெற ஆரம்பித்துள்ளதாக தொழிற் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் தோட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கறுப்புப் பட்டி அணிந்து தொழிலாளர்கள் தங்களது பணிகளில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதேவேளை, தங்களது 500 ரூபா சம்பள அதிகரிப்புப் போராட்டம் வெற்றி பெறவேண்டுமெனக் கோரி இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகளிலும் ஈடுபட்டதாக தோட்டங்களிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.
இதற்கிடையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்கள் நேற்று மாலை தங்களுக்குள் சந்தித்துப் பேசின.
கொழும்பில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, முதலாளிமார் சம்மேளனம் தங்களது நிலைப்பாட்டில் விடாப்பிடியக இருப்பதனால், அவர்களுடனான பேச்சைத் தவிர்த்து போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இ. தொ. கா. தலைவரும் பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் கூறினார்.