கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சு உருவாக்கவுள்ளதாகவும், இது தொடர்பான பிராந்திய அலுவலகம் அம்பாறையில் திறக்கப்படவுள்ளதாகவும் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் எம். எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். மாகாண சுதந்திர வர்த்தக வலயத்தை ஆரம்பிப்பதற் காக அரசாங்கம் 500 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இம் மாகாணத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை வழங்குவதற்கும், கைத்தொழில், விவசாயத்துறை உற்பத்திகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இவ்வர்த்தக வலயம் ஆரம்பிக்கப்படுகிறது.
இவ்வர்த்தக வலயம் ஊடாக சிவப்பரிசி, அரிசிமா, பச்சை மரக்கறி வகைகள், பழவகைகள், மீன், கருவடு, மட்பாண்ட உற்பத்திகள் என்பவற்றை சர்வதேச சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் எனவும் தெரிவித்த அமைச்சர், பெப்ரவரி மாதம் உத்தேச மாகாண வர்த்தக வலயம் செயற்பட ஆரம்பிக்கும் எனவும் தெரிவித்தார்.