வவுனியா பொது வைத்தியசாலை உணவக உரிமையாளர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத சிலரால் விசாரணைக்கெனக் கூறி கொண்டு செல்லப்பட்டுள்ளார். 24 மணிநேரமும் வைத்தியசாலையின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வைத்தியசாலைக்குள் செல்பவர்கள் அடையாள அட்டைகள் உட்பட அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு அனுமதிக்கப்படும் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் ஆஸ்பத்திரி உணவக உரிமையாளர் கடத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று ஆஸ்பத்திரி உணவகம் திறக்கப்படாததால் வார்ட்களில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் பெருமளவு நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தனது கணவன் கடத்தப்பட்டது தொடர்பாக மனைவி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.