“கம்பனிகளால் மலையக மக்கள் ஏமாற்றப்பட்டதை அரசு கண்டுகொள்வதாயில்லை.” – மனோ கணேசன்

“நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாயை அதிகரித்த கம்பனிகள் வேலை செய்யும் நாட்களை குறைத்து மலையக மக்களை ஏமாற்றியுள்ளன. ஆனால் இதனை அரசு கண்டுகொள்வதாயில்லை.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உதயகுமார் பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இந்திய இல்லத்தில் நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் குழந்தைகள்தான் 13ஆம் மற்றும் 16ஆம் திருத்தம் என்பனவையாகும். இன்று இந்த இரண்டையும் இலங்கை அரசு கைவிட்டு விட்டது.

13ம் திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபை தேர்தல்களை இலங்கை அரசு ஒத்தி வைத்துவிட்டது. அதேவேளை மாகாணசபைகளுக்கு உரிய பாடசாலைகளையும் வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உள்ளே சட்டவிரோதமாக சுவீகரித்து கொண்டுள்ளது.

16ம் திருத்தம் மூலமாகத்தான் தமிழ் மொழிக்கு நிர்வாக மொழி, கல்வி மொழி, மக்கள் சபை மொழி, சட்டவாக்க மொழி, நீதிமன்ற மொழி என்ற சட்ட அந்தஸ்துகள் கிடைத்தன. இவற்றுக்கும் இந்தியாத்தான் காரணமாக அமைந்தது.

ஆகவே 13ஐ பற்றி பேசும்போது, இந்திய அரசு 16 பற்றியும் இலங்கை அரசுடன் பேச வேண்டும். ஏனெனில் அதிகார பரவலாக்களை மட்டுமல்ல, இன்று மொழி உரிமையையும் இந்த அரசு பறித்துக்கொண்டு வருகிறது. நான் அமைச்சராக இருந்தபோது ஆரம்பித்த இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளித்து உருவாக்கும் திட்டத்தையும் இந்த அரசு நிறுத்தி விட்டது.

அதேபோல் இந்திய பிரதமர் எமது அழைப்பை ஏற்று மலையகம் வந்து வழங்கிய பத்தாயிரம் வீட்டு திட்டமும் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை அரசு இதை தாமதம் செய்கிறது. இதுவும் இந்திய அரசுக்கும் புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சுக்கும் நமது ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.

ஆகவே இலங்கை அரசு, இந்திய அரசுடன் உடன்பட்ட இந்த திட்டங்களை வலியுறுத்த இந்த அரசுக்கு முழுமையான உரிமைகள் உள்ளன. இதை இந்தியா செய்ய வேண்டும். அதேபோல் தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் இழுபறியில் இருக்கிறது. அரசு முழுவதுமாக  தொழிலாளர்களை கம்பனிகளின் கைகளில் ஒப்படைத்து விட்டு அமைதி காக்கிறது.

இதுவே ஏனைய துறை சார்ந்த பெரும்பான்மை இனத்தை சார்ந்த தொழிலாளர்கள் என்றால் அரசு அக்கறை காட்டாமல் இருக்குமா? நாட் சம்பளம் ஆயிரம் ரூபாய் என கூறிவிட்டு, வேலை செய்யும் நாட்களை தந்திரமாக கம்பனிகள் குறைத்து விட்டன. இதை அரசு கண்டுகொள்வது இல்லை.

அப்படியானால், இந்த மக்கள் வேறுநாட்டு பிரஜைகளா என கேட்கிறோம்? இந்த இந்திய வம்சாவளி தொழிலாள மக்கள் தொடர்பாக இந்திய அரசு கட்டாயமாக குரல் எழுப்ப வேண்டும். இந்த பிரச்சினைகள் தொடர்பான மேலதிக பேச்சுகளை நடத்த, தமிழ் முற்போக்கு கூட்டணி, பாரதம் சென்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்திக்க விரும்புகிறது. இவற்றுக்கு கொரோனா நிலைமை சீரானதுடன் ஏற்பாடுகள் செய்துதர வேண்டும்.

சீனா இலங்கையில் வந்து நிலைகொண்டிருப்பது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்பது மட்டுமல்ல, சீனா இலங்கையின் பல்மொழி, பன்மத, பல்லின அடிப்படையை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக நாம் சந்தேகம் கொள்கிறோம். ஆகவே தமிழர்களை சீனா இலங்கையர்களாக ஏற்க மறுக்கின்றதா..? என நாம் கேட்கிறோம்.

ஆகவேதான், இலங்கையில் சீனா நிலைப்பெறலை தமிழர் நாம் சந்தேகமாக பார்க்கிறோம் என்பதையும் இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *