வடக்கில் சமீப காலமாக வன்முறைக்குழுக்களுடைய செயற்பாடுகள் மிகத்தீவிரமடைய ஆரம்பித்துள்ளன. இதே நேரம் குறித்த வாள்வெட்டு வன்முறைகளுடன் கைது செய்யப்படுவோர் மிகச்சிறிய வயதுடையவர்களாகவும் இருப்பது கவலைக்குறியதாகும். அடுத்தடுத்து வன்முறைச்சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகததின் அடிப்படையில் கிளிநொச்சியில் 21 வயது இளைஞர் ஒருவரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புக்களின் சின்னங்கள், ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றச் செயல் ஒன்றுக்கான இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருக்கின்றார் என்ற தகவல் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்தமையினையடுத்து கிளிநொச்சி உதயநகர் பகுதியினை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
அதன் போது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கையடக்க தொலைபேசி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே விடுதலைப்புலிகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் கையடக்கத்தொலைபேசியில் இருப்பது விசேட அதிரடிப்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு வாள்களுடன் இளைஞர் ஒருவரின் புகைப்படமும் காணப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.