தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளில் நேற்று (வியாழக்கிழமை) காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,542 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து அவர், அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.