“எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை ஏற்க முடியாது.” – வியாழேந்திரன்

எமது நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு விடயமாக கருத முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் மஞ்சள் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் முதற்கட்டமாக 50 ஆயிரம் மஞ்சள் கன்றுகள் 5000 குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை (18) இடம்பெற்றது இதில் கலந்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்த போது ,

மனை சார் பொருளாதார முறையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இஞ்சி மஞ்சள் போன்ற சிறு பொருளாதார உற்பத்தி பயிர்களை உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்  நெற்பயிர்ச்செய்கை உடன் இணைத்து சிறு பொருளாதார பயிர்களையும் ஊக்குவிப்பதற்காக  பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அந்தவகையில்  சிறு பொருளாதார பயிர்செய்கைகளை ஊக்குவிப்பதற்காகவே மஞ்சள் போன்ற சிறு பொருளாதார பயிர்களை இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் தடை விதித்தது.  இதற்கான பிரதான காரணமாக அமைவது எங்களுக்கு தேவையான பயிர்களை உற்பத்தி செய்யாமல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு தங்கியிருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கின்றமையாகும்.

எனவே எமது உற்பத்தியையும் உற்பத்தி துறை சார்ந்து இருக்கின்ற உற்பத்தியாளர்களையும் மேம்படுத்தும் நோக்கிலேயே  சில உற்பத்திப் பொருட்களுக்கான இறக்குமதி தடை ஏற்படுத்தப்பட்டது அதில் ஒன்று தான் மஞ்சள் எமது வாழ்வில் சகல கருமங்களிலும் பின்னிப் பிணைந்ததாகவே இந்த மஞ்சள் காணப்படுகின்றது.

இந்த அடிப்படையிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் மஞ்சள் பயிர் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் முதற்கட்டமாக 50 ஆயிரம் மஞ்சள் கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாகவே மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் ஒரு குடும்பத்திற்கு பத்து மஞ்சட் கன்றுகள் என்ற அடிப்படையில் 5000 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக மஞ்சள் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்படுகிறது

மாவட்டத்தில் மஞ்சள், இஞ்சி , கறுவா , உளுந்து, பயறு போன்ற பயிர்களை பயிரிடுவதற்கான மண் வளம் செழுமையாக காணப்படுகின்றது எனினும் எமது உற்பத்திக்கு தடையாக இருப்பது ஆரம்ப மூலதன செலவு மற்றும் கருவிகளை பெற்றுக்கொள்ளுதல் போன்றன காணப்படுகின்றது எனவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

தற்போது மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிலக்கடலை மிளகாய் வாழை போன்ற பயிர்களை உற்பத்தி செய்யக்கூடிய உற்பத்தி கிராமங்களை அடையாளப்படுத்தி வருகின்றோம் குறிப்பாக கதிரவெளி மாங்கேணி வாகரை போன்ற கிராமங்களில் நிலக்கடலை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்

குறிப்பாக ஒரு விவசாயிக்கு மூன்று இலட்சம் ரூபா பயிற்சிக்காக வழங்கப்படுகின்றது . இவ்வாறு கரடியனாறு பகுதிகளிலும் நிலக்கடலை பயிர் இடுவதற்காக விவசாயிகளுக்கு 3 இலட்சம் ரூபாய் வீதம் வழங்கியுள்ளோம் இதேபோன்று களுதாவளை பிரதேசத்திலும் மிளகாய் உற்பத்தி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தையும் முன்னெடுத்துள்ளோம்.இதேபோன்று மாதுளம் பழம் உற்பத்திக்காக வெல்லாவெளி பிரதேசத்தையும் அடையாளப்படுத்தி உள்ளோம்.

மற்றும் கரடியனாறு வந்தாறுமுளையில் வாழை உற்பத்திக்கான பிரதேசமாக அடையாளப்படுத்தி உள்ளோம். அதேபோன்றுதான் மஞ்சள் உற்பத்தியையும் ஊக்குவிப்பதற்காக இப்போது மழை சார்ந்து ஒவ்வொரு குடும்பங்களுக்கும் பத்து கன்றுகள் வீதம் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும்பரந்த நிலப்பரப்பில் மஞ்சள் பயிர்ச்செய்கையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *