“மனிதாபிமானமற்ற இந்த அரசாங்கம் மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கிறது.” என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கொரோனா நிலவரம் – விலைவாசி உயர்வு என்பன தொடர்பாக சஜித் பிரேமதாஸ வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
கொவிட் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு மூடப்பட்ட பல நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கையை நிலையை அறிந்து நிவாரண பொதிகளை வழங்கியுள்ளன. ஆனால், இலங்கையில் நடப்பது என்னவென்றால் எங்கள் செல்வாக்கின் காரணமாக மக்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணப் பொதிகூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களும் தியாகம் செய்யப் பட வேண்டும் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கொவிட் வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கிய நாளிலிருந்து மக்கள் செய்த தியாகங்களை அரசாங்கம் பார்க்கவில்லை போலவும் தெரியாது என்பது போலவும் இருப்பதை நம்ப முடியாதுள்ளது. மக்களை தியாகம் செய்யுமாறு கேட்கும் அரசாங்கமே அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியுள்ளது.
மக்களை தியாகம் செய்யுமாறு கோரும் அரசாங்கமே உணவு செலவழிப்பின் ஆற்றலில் உலகில் மிகவும் வறிய ஐந்தாவது இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. நாட்டு மக்கள் தங்களின் ஊதியத்தில் 66 சதவீதத்தை உணவுக்காகச் செலவழிக்கும் நிலையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை அளித்து நாட்டுக்கு 60 கோடி ரூபா வறிதாய் பறிபோக காரணமாக இருந்த இந்த மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு நாளைக்கு மூன்று வேளை போக ஒரு வேளை உணவைக்கூட உண்ணாமல் பெருமூச்சு விடும் நூறாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தியாகம் செய்யுமாறு மக்களிடம் கேட்பதை விட பெரிய கோரிக்கை எதுவுமில்லை.
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொதியை மட்டுப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் நிவாரணப் பொதியை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனூடாக அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற தன்மையை விளங்கிக் கொள்ள முடிகிறது என்றார்.