பல இலட்சக்கணக்கான மக்கள் வேற்றுமைகளுக்கப்பால் மக்கா நகரில் ஒன்றுகூடித் தனக்காகவும் ஏனையவர்களுக்காகவும் அதேநேரம் உலக அமைதிக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இப்ராஹிம் (அலை),இஸ்மாயில் (அலை) அவர்கள் தங்களது தியாகத்தை வெளிப்படுத்தியதையே இந்த ஹஜ் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த உலகில் இறை கட்டளையை விட எந்தவொரு பொருளும் பெறுமதியற்றது என்ற படிப்பினையை இது எமக்குப் புகட்டுகிறது.
உலோபித்தனம், அளவு கடந்த ஆசை என்பன அழிக்கப்பட்டு உள்ளம் பூரணமாகப் பரிசுத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையையே இது கற்றுத்தருகிறது. இவ்வாறான உள்ளங்களிலிருந்தே கருணை, அன்பு, பாசம் என்பவற்றை எதிர்பார்க்க முடியும். சுயநலமும் பேராசையும் மலிந்து காண்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஹஜ் எங்களுக்குச் சிறந்த ஒரு படிப்பினையைப் பெற்றுத்தருகிறது.எனவே, உலகில் மனிதத்துவம் மலர இப்புனிதத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.
இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.