“எந்த ஆதனமும் இல்லாமல் ரணிலின் சகாக்களுக்கு 54பில்லியன் ரூபா கடன்கள் வழங்கியுள்ள மக்கள் வங்கி.”- இரா.சாணக்கியன் காட்டம் !

“பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.” என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாட்டில் மக்கள் எழுச்சிமூலம் மாற்றம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் வாழும் அனைத்து மக்களுக்கும் எதிரான மிகப்பெரும் துரோகச்செயலை செய்து பிரதமர் பதவியினை ஏற்று ஜனாதிபதி ராஜபக்ஸக்களை பாதுகாப்பதற்கான முழு முயற்சியையும் முன்னெடுத்துள்ளார்.

புதிதாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரும் எரிபொருட்கள் உட்பட பல்வேறு பொருட்கள் விலைகள் அதிகரித்துள்ளன. இந்தவிலையேற்றம் தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். 180ரூபாவாகயிருந்த அமெரிக்க டொலரின் பெறுமதி 365ரூபாவுக்கு வந்துள்ளது.பொருளாதாரத்தினை சரியாக முகாமைசெய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமையேற்பட்டது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ எடுத்த பிழையான தீர்மானங்களே நாடு இந்த நிலைக்கு செல்வதற்கு காரணமாகவுள்ளன. எரிபொருள் அதிகரிததால் அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும். இன்று மக்கள் இந்த பொருளாதார நிலைமைக்கு ஈடுகொடுக்கமுடியாத நிலையுள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக என்ன செய்யவேண்டும் என இலங்கைக்கு உதவும் பல்வேறு அமைப்புகளும் ஸ்திரமான அரசியல் சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் என்று கூறிவிட்டது. இலங்கையானது பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியேவருவதாகயிருந்தால் இந்த அரசியல் ஸ்த்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும். அதற்காக மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய ஜனாதிபதி,மக்கள் நம்பிக்கை வைக்ககூடிய பிரதமர்,மக்கள் நம்பிக்கைவைக்ககூடிய பாராளுமன்றம்,மக்களின் நம்பிக்கையினை வென்றெடுக்ககூடிய அமைச்சரவை இருப்பதுதான் அரசியல் ஸ்திரத்தன்மையாகும்.இன்று சர்வதேசம் மறைமுகமாக சொல்வது கோத்தாபாய ராஜபக்ஸ வீட்டுக்கு செல்லவேண்டும்.

கோத்தா கோ ஹோம் என்ற அலை அனைத்து பகுதிளிலும் ஒலிக்கும் நிலையில் ஜனாதிபதி அவரது அதிகாரத்தினை குறைக்கும் சட்டம் என்ற போர்வையில் 21வது திருத்த சட்டத்தினை கொண்டுவந்து மக்களை ஏமாற்றும் நாடகத்தினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

இந்த நாடு மிக பாரதூரமான நெருக்கடிகளை கொண்டுள்ள நிலையில் பெரும்பாலானவர்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ள நிலையில் கடந்த ஐந்த வருடத்தில் மக்கள் வங்கியின் ஊடாக ஆக கூடுதலான கடன்களைப்பெற்றவர்கள் இதுவரையில் ஒரு ரூபா கூட செலுத்தாதவர்கள் உள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் தயாகமகே என்னும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் 2019ஆம்ஆண்டு தொடக்கம் 2022ஆம்ஆண்டு வரையில் 5000மில்லியனுக்கும் அதிகமான தொகையினை கடனாக பெற்றுள்ளார். அதிகமான கடனைப்பெற்று இதுவரையில் ஒரு ரூபா கூட மீள செலுத்தாதவர்களில் முதல் பத்துப்பேரில் ஆறாவது இடத்தில் அவர் உள்ளார்.

இது ராஜபக்ஸ குடும்பத்தின் காசும் அல்ல தனியாரின் காசும் அல்ல.மக்களின் காசு.இது தொடர்பில் பாராளுமன்றத்தில் நான் பேசியதற்காக இன்று காலை மக்கள் வங்கியின் தலைவரினால் எனக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கடன்களை மீளப்பெறுவதற்கான சட்ட ஆலோசனை செய்வதாக கூறப்பட்டுள்ளது. மூன்று பில்லியன் பணம் ஒரு தனி நபருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆனால் நான்கு வருடத்திற்கு பின்னர் என்ன நடவடிக்கையெடுக்கலாம் என ஆராய்வதாக தெரிவிக்கின்றனர்.

லீசிங் கட்டமுடியாத சாதாரண மக்களின் வாகனங்களை பறித்துச்செல்கின்றீர்கள்,சிறு வர்த்தகளின் கடன்கள் கட்டாவிட்டால் வர்த்தக நிலையத்தினை ஏலத்தில் விடுகின்றீர்கள். தனிநபர் 3000இதுவரை கட்டவில்லையென்றதுடன் எனக்கு கடிதம் அனுப்புகின்றார்கள்.ஏனென்னால் அவர் ரணிலின் சகா என்பதனாலாகும்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிதாக நிதியமைச்சர் பதவியையேற்றதன் பின்னர் அந்த அமைச்சின் கீழ் வரும் மக்கள் வங்கி ஊடாக முதல்வேலையாக எனக்கு கடிதம் அனுப்பும் வேலையைதான் செய்துள்ளார்.

இனங்காணப்பட்ட முதல் பத்து பேருக்கு கடந்த ஐந்த வருடத்தில் 54பில்லியன் ரூபா கடன்கள் மக்கள் வங்கி ஊடாக வழங்கப்படடுள்ளது. இது கோப் குழுவினால் பெறப்பட்ட தகவல்.இதனை நான் பகிரங்கப்படுத்தியதற்காக என்னை இடைநிறுத்தினாலும் நான் கவலைப்படப்போவதில்லை.கடன்பெறப்போகும்  வங்கிகளில் ஏதாவது அடமானம் வைத்தே பணம் வழங்கப்படுகின்றதே. ஆனால் இவ்வளவு பெரிய நிதியானது எந்தவித ஆதனமும் இன்றி வழங்கப்பட்டுள்ளது.

இன்று மட்டக்களப்பில் மக்கள் தினமும் பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இன்று வேட்டிய மடிச்சு கட்டுவது குறித்து பேசுகின்றனர். ஆரையம்பதியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றோலுக்கும் எரிவாயுவுக்கும் தினமும் கஸ்டப்படுகின்றனர். அதனை வீதிக்கு சென்று மக்களின் நிலைமையினை பார்த்து அதனை தீர்த்துவைக்க முயற்சி செய்யுங்கள். மேலதிகமாக 2000எரிவாயு சிலிண்டர்களை மட்டக்களப்புக்கு கொண்டுவரமுடியாத வக்கற்ற தலைவராகவே உங்கள் தலைவர் இருக்கின்றார். வேட்டியை மடித்துக்கட்டதேவையில்லை,மக்களுக்கு ஏதாவது செய்ய சொல்லுங்கள் இல்லாது விட்டால் பதவி விலகிவிட்டு வீட்டுக்கு செல்ல சொல்லுங்கள்.

மகிந்த ராஜபக்ஸ பிரதமராகயிருந்ததற்கு பதிலாக ரணில் (ராஜபக்ஸ) பிரதமராக தற்போதுள்ளார்.பிள்ளையான் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவதுபோன்று ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவு அவர் வழங்கலாம். இதில் புதியதொரு வித்தியாசம் இல்லை.தற்போதும் பசில் ராஜபக்ஸதான் பாராளுமன்றத்தினை இயக்குகின்றார்.பிள்ளையானுக்கும் கொள்கையில்லை,ரணிலுக்கும் கொள்கையில்லை.இருவரும் ஒன்றாக பயணிக்கமுடியும்.”என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *