10
10
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில்,
“இந்த கொரோனா காலம் சமநிலையற்ற போக்கை அனைத்துத் துறைகளிலும் உருவாக்கியுள்ளது. சமூகத்தில் பலவீனமானவர்கள் மேலும் பலவீனப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கால் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். மேலும், மனித உரிமை மீறல், இனவெறித் தாக்குதல், குழந்தைகள் மீதான துஷ்பிரயோகம் போன்றவை அதிகரித்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் நாணயமான பிட்கொயினை பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சட்டப்பூர்வ நாணயமாக மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோர் அங்கீகரித்துள்ளது.
இதன்மூலம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல் நாடு எல் சால்வடோர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
எல் சால்வடாரின் பொருளாதாரம், அந்த நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் அனுப்பும் பணத்தை பெரும்பான்மையாகச் சார்ந்துள்ள நிலையில், பிட் கொயினை சட்டப்பூர்வ நாணயமாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்டமூலத்தை ஆதரித்து பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து, எல் சால்வடாரில் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய சட்டப்பூரவ நாணயமாக பிட்கொயின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதனிடையே, நாட்டின் மேம்படுத்த, மெய்நிகர் நாணயங்கள் உதவும் என்று ஜனாதிபதி நயீப் புகேலே தெரிவித்துள்ளார்.
“எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்காக சில பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர்.” என இலங்கையை பாதுகாப்போம் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பான இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் செயலாளரான ஆனந்த சாகர தேரர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்து தற்போது சிறிது சிறிதாக கடலில் மூழ்கிவருகின்றது. குறித்த கப்பலின் எண்ணெய் தற்போது கடல்நீரில் கலந்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலின் உரிமை நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த முறை நியூ டயமன்ட் கப்பலினால் தென்னிலங்கை கடற்பிரதேசத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக இலங்கை அரசாங்கம் கோரிய 20 பில்லியனை நட்டஈடாகக் கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நிறுவனம் தற்போது இந்த சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தின் இலங்கை பிரிவிலுள்ளவர்களுடன் திரைமறைவில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிறுவனத்திற்காக தற்போது ஒரு சில பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர். உடனடியாக இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனமும் அதேபோல அதன் இலங்கை பிரதிநிதிகளும் பொறுப்புகூற வேண்டும். அதேபோல நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் இன்று வினவ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஒருவேளை கொழும்பு துறைமுகத்திற்குள் வந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியிருந்தால் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்.
அதேபோல இந்த நாட்டின் துறைமுகம் மற்றும் இலங்கை கடற்படையினர் இந்தத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என்றால் அதற்கான விசாரணையை நடத்த ஏன் முடியவில்லை? அதற்காக வெளித்தரப்பு அழுத்தங்கள் இருக்கின்றதா என்பதை கேட்கின்றோம். யாருடைய வர்த்தக ஒப்பந்தம் இதற்கு அழுத்தமாக உள்ளது? ஆகவே 50 பில்லியன் டொலர்கள் வரை இலங்கைக்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனம் நட்டஈடாக வழங்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
“குறித்த பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீட்கப்படும் கஞ்சா போதைப்பொருளை நீதிமன்றில் சமர்ப்பிக்க முன்னர் அவற்றில் இருந்து பகுதியளவில் கஞ்சா போதை பொருளை திருடி அவற்றை வெளியில் விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
சான்று பொருளான போதை பொருள் திருட்டு மற்றும் திருடிய போதை பொருளை விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஈடுபட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் எதிராக பொலிஸாரின் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.
ஜி 7 மாநாடு நடத்தப்படும் ஹோட்டல் ஒன்றில் வெடிகுண்டு அச்சுறுத்தல் வெளியான பின்னர் சுமார் 100 விருந்தினர்கள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஜி 7 உச்சிமாநாடு ஆரம்பமாவதற்கு ஒரு நாள் (யூன் 11 வெள்ளிக்கிழமை) முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தின் கார்விஸ் விரிகுடாவிலிருந்து 27 மைல் தொலைவில் உள்ள பால்மவுத் என்ற ஹோட்டலுக்கு வெளியே உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை 3:15 மணியளவில் பொதியொன்றிலிருந்து சந்கேத்திற்கிடமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த ஹோட்டலில் தான் ஜி 7 மாநாட்டிற்காக யூன் 11 வெள்ளிக்கிழமை முதல் உலகத் தலைவர்கள் சந்திப்பினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
அதன் பின்னர் ஹோட்டலிலிருந்து ஊழியர்களும், விருந்தினர்களும் வெளியேற்றப்பட்டதுடன், கார்பிஸ் விரிகுடாவின் உச்சி மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி 11,000 காவல்துறை அதிகாரிகளும் இராணுவ வீரர்களும் பாதுகாப்பு வளையத்தை உருவாக்கியுள்ளனர்.
அது மாத்திரமன்றி இது தொடர்பான குற்றவியல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை தொடங்கும் ஜி 7 உச்சி மாநாடு உலகின் மிக சக்திவாய்ந்த ஜனநாயக தலைவர்களை ஒன்றிணைக்கும் மாநாடாகும்.
மாநாட்டில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும். குழுவின் மற்ற உறுப்பினர்களில் கனடா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகியவை அடங்கும்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி போடுவதை ஆதரிப்பதன் மூலம் கொரோனா வைரஸை தோற்கடிக்க உறுப்பினர்களை ஊக்குவிக்க போரிஸ் ஜோன்சன் இந்த மாநாட்டை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.
வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக் டொக் (TikTok) காணொலி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.